×

அயோத்தி வழக்கு : நிலப்பிரச்சனை இல்லை...மக்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரம் என இந்து அமைப்புகள் வாதம்

டெல்லி: மத்தியஸ்தர்கள் அடங்கிய குழு அமைத்து அயோத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இந்த கருத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது. அயோத்தி விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று பரிசீலனை செய்தது.

விசாரணையின் போது சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தரை நியமிப்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும் என நீதிபதிகள் கூறினர். ஆனால் இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முடிவை பொதுமக்கள் ஏற்கமாட்டார்கள் என இந்து அமைப்புகள் வாதிட்டன. அயோத்தி விவகாரம் நிலப்பிரச்சனை கிடையாது. இந்து மத ரீதியிலான மக்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரம் எனவும் இந்து அமைப்புகள் வாதிட்டன.

அதே சமயம் அயோத்தி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், பிரச்சனையை சுமுகமாக முடிக்க ஏதுவாக மத்தியஸ்தரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

கடந்த மாதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது, இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இதனை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ராம் லல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், ஆட்சேபனை தெரிவித்தன. கடந்த காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக கூறி இந்த யோசனையை ஏற்க மறுத்தன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டபின், மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிபதிகள் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayodhya ,organizations ,faith affair , Ayodhya problem, Supreme Court, mediators, Hindu organizations, argument
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்