மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடை களை மூடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆஜரானார். அரசுத்தரப்பில், ‘‘தமிழகத்தில் இரு கட்டங்களாக 1000 கடைகள் மூடப்பட்டுள்ளன. சந்தேகம் எழும்பட்சத்தில் 21 வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்கான சான்றை சரிபார்க்கவும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது. தற்போது மது விற்பனை குறைந்துள்ளது. மது விலை உயர்வால்தான், வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ₹30 ஆயிரம் கோடி வருவாய் அதன் காரணமாகவே அதிகரித்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, ‘‘பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் குடிநோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதன் அடிப்படையில், 2021க்குள் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் பார்களை நிரந்தரமாக மூட வேண்டும். அதுபோல மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக திறக்கக்கூடாது என்பது குறித்து அரசு பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8க்கு ஒத்திவைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி