சென்னை : கர்ப்பிணி தாய்மார்களுக்கான அம்மா தாய் சேய் நல பெட்டக திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தாய் சேய் நல பெட்டகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சத்துமாவு பேக்கெட்டுகள், இரும்பு சத்து டானிக், விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம் ஒரு கிலோ, ஆவின் நெய், ஆல்பெண்ட சோல், குடற்புழு மாத்திரை ஆகியவை வழங்கப்படுகின்றன.
தாய், சேய் நல பெட்டகம் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தாய் சேய் நல பெட்டக திட்டத்தை தொடர்ந்து 3300 உதவி மருத்துவர்கள் , 126 இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை எளிதில் பதிந்திட உதவும் இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 28 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளதாகவும் அரசின் உயர்தர சிகிச்சையின் காரணமாக தமிழகத்தில் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்றும் சுகாதாரத்துறைக்கு இதுவரை ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார். 2012 முதல் தற்போது வரை முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மூலம் 56 லட்சத்து 36000 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.8,860 கோடி உதவி தொகை வழங்கப்பட்டதாக கூறிய அவர், தாய் சேய் மருத்துவமனையின் 175ம் ஆண்டை முன்னிட்டு ரூ.15 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி