தேனி: தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 முறை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினார் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே லட்சுமிபுரத்தில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ``டிடிவி.தினகரனுடன் சென்றவர்கள் பணம், பொருள் இழந்து அதிமுகவிற்கு வருவதற்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என அத்தொகுதி மக்கள் விரும்புகிறார்கள். பலமான எங்கள் கட்சியுடன் பாஜக, பாமக, புதிய தமிழகம் கூட்டணி வைத்துள்ளன. எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருடன் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார்,’’ என்று பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி