பெங்களூரு: விமானி அபிநந்தனின் அருவா மீசை, நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது. பல இளைஞர்கள் அவரைப் போல் மீசை வைக்க தொடங்கி விட்டனர்.இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்களை, மிக்-21 போர் விமானத்தில் துரத்தி சென்று தாக்குதல் நடத்தியவர் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன். இவர் சென்னையை சேர்ந்தவர். பாகிஸ்தான் விமானத்தை அவர் சுட்டு வீழத்திய போது, பாகிஸ்தான் எல்லைக்குள் நீண்ட தூரம் அவருடைய விமானம் சென்றது. அதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதும் பாரசூட் மூலம் குதித்த அபிநந்தனை, அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, அபிநந்தன் தனது உயிர் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மிகவும் தில்லாக பதிலளித்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய துணிச்சல், இந்திய மக்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு, அவர் வைத்திருந்த அருவா மீசையும் இளைஞர்களின் மனதை கவர்ந்தது.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் இருதினங்களுக்கு முன் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைத்தது. இந்நிலையில், அவருடைய அருவா மீசை இளைஞர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகிவிட்டது. அவரைப் போல் இளைஞர்கள் மீசை வளர்க்க துவங்கி விட்டனர். பெங்களூரு நகரில் வசித்து வரும் முகமது சந்த் என்பவர் அபிநந்தன் போன்று அருவா மீசை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் அபிநந்தனின் ரசிகன் ஆகி விட்டேன். என்னைப்போல் பலர் அவரை பின்தொடர்கிறார்கள். அவரது ஸ்டைலை நான் விரும்புகிறேன். அவர்தான் உண்மையான ஹீரோ’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி