×

திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து அய்யா வழி பக்தர்கள் இன்று பிரமாண்ட ஊர்வலம்...இரவில் நாகர்கோவிலில் மாசி மாநாடு

நாகர்கோவில்: அய்யா அவதார தின விழா ஊர்வலம் திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டது. இரவில் நாகர்கோவிலில் சமய மாநாடு நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை (4ம்தேதி) அய்யா அவதார தின விழா ஆகும்.  இதையொட்டி இன்று (3ம் தேதி) காலை 6 மணிக்கு அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் நிழல் தாங்கல் பகுதியில் இருந்து குமரி மாவட்டம் சாமித்தோப்பு நோக்கி அய்யா வழி பக்தர்களின் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இன்று இரவு நாகர்கோவிலை வந்தடைகிறது.  ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.  இதே போல் இன்று காலை 9 மணிக்கு அய்யா சிறையில் இருந்த திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து  ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பாறசாலை, படந்தாலுமுடு, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வில்லுக்குறி, சுங்கான்கடை வழியாக இன்று இரவு நாகர்கோவிலை வந்தடைகிறது.

பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அய்யாவழி ஆன்மீகவாதிகளின் சமய உரையும், சொற்பொழிவு இசை நிகழ்ச்சி, திருஏடு வாசிப்பு ஆகியவை நடைபெறுகிறது. அய்யாவின் அவதார தினமான நாளை (4ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு நோக்கி பிரமாண்ட மாசி ஊர்வலம் தொடங்குகிறது. அய்யாவின் அகிலத்திரட்டை தாங்கிய வாகனமும், முத்துக்குடைகளும் முன்செல்ல தொடர்ந்து அய்யாவழி பக்தர்களின் ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலம் கோட்டாறு, இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பை சென்றடைகிறது. இரவு சாமிதோப்பு பதியில் ஊர்வலம், அன்னதர்மம், அய்யாவழி மாநாடு ஆகியவை நடைபெறுகிறது. அவதார தின விழாவையொட்டி சாமித்தோப்பில் நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Ayyappa ,rally ,Tiruchendur ,Massi Conference ,Nagercoil , Tiruchendur, Trivandrum, Ayya path devotees, grand rally, Nagercoil, Massi Conference
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்