வாகா: பாகிஸ்தான் பிடியில் கடந்த 3 நாட்களாக இருந்த இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டு மாலை 4 மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார். பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரை வரவேற்க வாகா எல்லையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அபிநந்தனை வரவேற்க வந்த பொதுமக்கள் அனைவரும் தத்தம் கைகளில் இந்திய தேசியக்கொடிகளை உற்சாகமாக அசைத்து வரவேற்றனர்.
லாகூரிலிருந்து கார் மூலமாக, அபிநந்தன், இந்திய எல்லையான வாகாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்த டொயோட்டோ வகை கறுப்பு வண்ண காருக்கு முன்னும் பின்னும், பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் அணி வகுத்தன.அந்த கார்களில் ஜாமர்களும் பொருத்தப்பட்டிருந்தன. ரிமோட் குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்திவிட கூடாது என்பதற்காக இவ்வாறு ஜாமர் வசதி கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அபிநந்தன் அழைத்து வரப்பட்டார். அபிநந்தன் அழைத்து வரப்பட்டதையொட்டி வரலாற்றில் முதல்முறையாக கொடிகளை இறக்கும் நிகழ்ச்சி வாகா எல்லையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட அபிநந்தனை வரவேற்க விமானப்படையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் வந்ததால் வாகா எல்லையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
முன்னதாக புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியா தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பதுங்கியுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.