×

இந்தியா வருகிறார் விமானி அபிநந்தன்; வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்; வாகா எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து இன்று விடுவிக்கப்படும் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லைக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் செல்கிறார். வாகா எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையை சேர்ந்த கேப்டன் ஜே.டி.குரியன் அடங்கிய அதிகாரிகள் அபிநந்தனை இந்தியா அழைத்து வர உள்ளனர். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாமை இந்திய விமானப்படை போர் விமானங்கள் கடந்த 26ம் தேதி அதிகாலை குண்டுகள் வீசி தகர்த்தன.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்து ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுவீச வந்தன. சரியான நேரத்தில் இந்திய போர் விமானங்கள் இடைமறித்ததால், வெளிப்பகுதியில் குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானங்கள் திரும்பின. அதில் எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. அதேபோல, இந்தியாவின் மிக்-21 விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது.

அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற சென்னையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இரு நாட்டு போர் விமானங்கள் எல்லை தாண்டிய நிலையில், இந்திய விமானி கைதான விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில், இந்தியாவை பொறுத்தவரையில், எந்த நிபந்தனையின்றி உடனடியாக அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என தீர்மானமாக தெரிவிக்கப்பட்டது.

அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் அந்நாட்டு அரசை வலியுறுத்தினர். பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், அபிநந்தன் லாகூரில் இருந்து சாலை மார்க்கத்தில் வாகா எல்லை வழியாக அழைத்து வரப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அபிநந்தனை வரவேற்க சென்னையில் இருந்து டெல்லிக்கு அவரது பெற்றோர்கள் சென்றனர். இதனையடுத்து விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாகவும், முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே முன்னதாக மோடியிடம் வாகா செல்ல அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்தார். மோடி அனுமதி அளித்ததை அடுத்து அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்கிறார்.

பஞ்சாப் : இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை கடந்த 27ம் தேதி இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டார். மிக் 21 ரக போர் விமானத்தின் சென்ற அபிநந்தனை எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களது பாதுகாப்பில் அபிநந்தனை கடந்த இரண்டு நாட்களாக வைத்துள்ளனர். இந்நிலையில் விமானி அபிநந்தனை விடுப்பதாக பாக்., பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார். வாகா எல்லையில் விமானி அபிநந்தன் இன்று விடுவிடுக்கப்பட உள்ளார். அபிநந்தனை வரவேற்க விமானப்படை உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pilot ,India ,border ,Wagah , India, Pakistan, Abhi Nandan, Wahab border, Chief Minister of Punjab, Amarinder Singh
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது