×

சார்பதிவாளர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை செயல்படுத்தாதது வருத்தமளிக்கிறது: ராமதாஸ் அறிக்கை

சென்னை: சார்பதிவாளர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டை செயல்படுத்தாதது வருத்தம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வணிகவரித்துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. துணை வட்டாட்சியர் பணியிடங்கள் முழுக்க முழுக்க மாறுதல் மூலமான நியமனம் வழியாக நிரப்பப்படுகின்றன.  உதவியாளர் நிலையில் இருப்பவர்கள் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர்களாக நியமிக்கப்படும் போது, அவர்களுக்கு கூடுதல் ஊதியம், கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,  ஒரு நிலையில் உள்ள அதிகாரிகள், அதிக ஊதியமும், கூடுதல் பொறுப்பும் கொண்ட அடுத்த நிலை  பணிகளில் நியமிக்கப்பட்டால் அதை பதவி உயர்வாகவே கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனால் இத்தகைய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்வதில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கடந்த 2005ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில்தான்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வட்டாட்சியர்கள்,  உதவி வணிகவரி அலுவலர்கள் நியமனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுத்துறையிலும் இத்தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று அத்துறையை நிர்வகிக்கும் வணிகவரித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், அத்தீர்ப்பு இன்று வரை பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சார்பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் பதிவுத்துறை தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் சமூகநீதியில் அக்கறை கொண்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை அந்தப் பதவியில் அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

அபிநந்தன் விடுதலைக்கு வரவேற்பு
‘பாகிஸ்தானிலிருந்து விமானப்படை வீரர் அபிநந்தன் விடுதலையாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வீரத்திருமகனை வரவேற்க இந்தியா, குறிப்பாக சென்னை சிலிர்ப்புடன் காத்திருக்கிறது’ என டிவிட்டரி்ல் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramadoss , Carpativalar, reservation, Ramadoss
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...