திருச்சி : திருச்சி என்ஐடியில் உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான என்ஐடியில் காலியாக உள்ள 134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிரேடு 2 தகுதியிலான பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என கூறப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பை எதிர்த்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் 134 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பில் இடஒதுக்கீடு குறித்த விவரங்கள் இல்லாததால், அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் எத்தனை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் என்ஐடியில் உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் பொது பிரிவினர்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பில் இடஒதுக்கீடு குறித்து தகவல்கள் இல்லாதது குறித்து பதிலளிக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்ஐடி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி