×

இன்று 3வது ஒருநாள் போட்டி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

மும்பை: இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வாங்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். இடது கை சுழற்பந்துவீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா, பூனம் ராவுத், கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பந்துவீச்சிலும் ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, தீப்தி, ஏக்தா, பூனம் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்தியா வரிந்துகட்டும் நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் உத்வேகத்துடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
ஒருநாள் போட்டித் தொடர் முடிந்ததும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கவுகாத்தியில் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,match ,ODI ,England , England, Whitewash, India
× RELATED மைதான் இந்தி விமர்சனம்