மதுரை: பா.ம.க-வுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மாவை முதுகில் குத்தியது போன்ற செயல் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விமர்சித்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஜெயலலிதா வழிவந்தவர்கள் என கூறி அவரது கொள்கைக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளதாக சாடினார். ஜெயலலிதா குறித்து தவறான கருத்துகளை வெளியிட்ட பாமக ராமதாசுடன், எடப்பாடி பழனிச்சாமி இன்று கூட்டணி வைத்துள்ளார். பாமகவுடன் கூட்டணி வைத்ததை, ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
தற்போதைய அதிமுக-வை விமர்சித்த புகழேந்தி பாமக-வையும் கடுமையாக தாக்கி பேசினார். அதிமுக - பாமக கூட்டணியில் அதிக அளவு பணம் கைமாறியுள்ளது. மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் என்ற நிலையில் தற்போது அன்புமணி உள்ளார். ரூ.300 கோடி முதல் ரூ.500கோடி வரை பாமக வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
பெரிய கூட்டணி அமைந்தது போல அதிமுக அவர்களாகவே பெருமையடித்து கொண்டு வருகின்றனர். பாமகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் விலகி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததால் பாமக அழிந்துபோகும் நிலைக்கு போயிருக்கிறது. டெண்டர்களுக்காகவே ஒரு சில அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியுடன் உள்ளனர் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி