சென்னை: நாடு முழுவதும் 65 இடங்களில் உள்ள மலபார் கோல்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலபார் கோல்டு தங்கம் மற்றும் வைர நகைக்கடை சென்னை கோழிக்கோடு ஆகிய பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்ததாக நாடு முழுவதும் உள்ள மலபார் கோல்டு நகைக்கடைகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை கிளைகள் உட்பட மொத்தம் 64 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதில், கோவை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணி அளவில் 40க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த வருடம் இந்த நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் மட்டும் இவர்களுக்கு சொந்தமான உற்பத்தி ஆலை உட்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ஈடுபட்ட போது பணிக்கு வந்த ஊழியர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய முழுவதும் நடக்கும் இந்த சோதனையில் 1000-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி