தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளை நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் எரிந்து சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து வில்லிசேரியில் 700 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம், பருத்தி, மிளகாய், எலுமிச்சை, பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு விளைநிலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்திற்கு செல்ல சரியான வழி இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனிடையே தீ விபத்து நடந்த இடத்தை வட்டாட்சியர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த தீ விபத்தால் பயிர்களை இழந்துள்ள நிலையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளைநிலங்களில் தீப்பற்றியதற்கு காட்டுத்தீ காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி