கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணாடிபுதூர் கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 15ந் தேதி வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அந்த யானை, பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள, வரகளியாறு பகுதியில், மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. யானையின் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். 48 அடிப்படை உத்தரவுகளுக்கு கீழ்படிய யானைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உருது, அசாம் மொழியில் யானைக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை தமிழும் பிற மொழிகளும் கலந்து பேசும் கோவை வனப்பகுதி மலை சாதியின பாகன்கள் அளிக்கிறார்கள்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சின்னதம்பி யானைக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள பாகன்கள் உருது, அசாம் ெமாழி கலந்து பேசுபவர்கள். அவர்கள் பரம்பரையாக யானைகளுக்கு ெகாடுக்கப்படும் உத்தரவுகள் என்ன? என்பது பற்றி அறிந்தவர்கள். அவர்கள், சின்னதம்பி யானை 48 அடிப்படை உத்தரவுகளுக்கு கீழ்படிய உருது, அசாம் மொழி கலந்து பேசி பயிற்சி அளிக்கிறார்கள். சின்னதம்பி யானையும் பாகன்கள் பேசும் மொழிகளில் உத்தரவுகளை புரிந்துகொண்டு செயல்பட தயாராகி வருகிறது. அசாம் மற்றும் வங்கதேச பகுதியில் யானைகளை போருக்கு பயன்படுத்தும்போது இந்த 48 உத்தரவு யானைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படும். இந்த 48 உத்தரவுகளில் 90 சதவீத உத்தரவுகள் சாதுவான குரலில் பேசி கட்டுக்குள் கொண்டு வரக்கூடியது. 10 சதவீத உத்தரவுகள் சத்தமான குரலில் பேசி செயல்பட வைக்கக்கூடியது. யானைக்கு காயம் ஏற்படாத வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியினால் யானைக்கும், பாகன்களுக்கும் பிணைப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி