நொய்டா,: போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலாவின் போலி சமூக வலைதள கணக்கு மூடப்பட்டது.
2008 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் சந்திரகலா. ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எடுத்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பிரபலமானார். தற்போது மாநில இடைநிலை கல்வி வாரியத்தில் சிறப்பு செயலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி நொய்டா செக்டார் 49க்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.அதில், ‘மர்ம நபர்கள் சிலர் எனது புகைப்படம், பெயர், பதவி உள்ளிட்ட சுயவிவரங்களை திருடி போலி சமூக வலைதள கணக்கு (லிங்க்டூஇன்) தொடங்கியுள்ளனர். இதனுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் எனது போலி கணக்கில் மோசமான பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே இந்த கணக்கை உடனடியாக ‘பிளாக்’ செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து ஐபிசி 66சி, 66டி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நொய்டா சைபர் செல்லுக்கு மாற்றினர். அதனைத்தொடர்ந்து போலி கணக்கு மூடப்பட்டது. இந்த போலி கணக்கை உருவாக்கி பயன்படுத்தி வந்த ஆசாமியையும் தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி