காஜியாபாத: லோனி அருகே, ஆயுர்வேத மருத்துவர் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காஜியாபாத் விகாஸ் நகரை சேர்ந்தவர் வீர் சிங்(42). ஆயுர்வேத மருத்துவர். ரிஷி மார்க்கெட் காலனியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது மருத்துவ கிளினிக்கில் இருந்தபோது, முகமூடி அணிந்து மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். பின்னர் இருவர் கிளினிக் வாசலில் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்து கொண்டிருக்க, உள்ளே சென்ற மற்றொருவன், வீர் சிங் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பினான். சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர், வீர் சிங்கை மீட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வீர் குடும்பத்தினர், பழைய முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டினர் வீரை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 4 பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி