×

கொலையில் துப்பு துலங்கியது : ஓட்டல் அறையில் இறந்த பெண் சிறை கைதியின் 2வது மனைவி

பெங்களூரு: பெங்களூரு உப்பார்பேட்டை தனியார் ஓட்டலில் கொலையான இளம் பெண் சிறையில் இருந்து தப்பிய கைதியின் 2வது மனைவி என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.பெங்களூரு உப்பார்பேட்டை சரகத்திற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைந்துள்ளது தனியார் ஓட்டல். பிப்.18ம் தேதி சந்திரப்பா என்ற சங்கர் மற்றும் ரேணுகா என்ற 2 பேர் இந்த ஓட்டலில் வந்து அறை வேண்டுமென்று கேட்டுள்ளனர். அவர்களிடம் ஓட்டல் ஊழியர்கள் முகவரியை விசாரித்துள்ளனர். அப்போது சங்கர் தனது ஊர் கோலார் என்று அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு ஒரு அறையை ஒதுக்கினர். தம்பதிகள் தங்கள் உடமைகளுடன் அந்த அறைக்கு சென்றனர். உணவு மற்றும் பிற தேவைகளுக்கு இருவரும் வெளியே சென்று வந்தனர். பிப்.19ம் தேதி காலை இருவரும் வெளியே வரவில்லை. வழக்கம்போல காலையில் ஓட்டல் துப்புரவு தொழிலாளி, அவர்களின் அறைக்கு சென்று சுத்தம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

சந்தேகம் அடைந்த அவர் ஓட்டல் மேலாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் உப்பார்பேட்டை போலீசாரை வரவழைத்தார். போலீசார் சென்று மாற்று சாவி உதவியுடன் கதவை திறந்தனர். அப்போது அங்கு ரேணுகா ரத்த கறையுடன் சடலமாக கிடந்தார். அவரின் பேக் மற்றும் கழுத்தில் கிடந்த தங்க நகைகளும் மாயமாகியிருந்தது. இதையடுத்து இது நகைக்காக நடந்த கொலை என்று உறுதி செய்த போலீசார் உடன் தங்கியவர் குறித்து விசாரித்தனர். அதில் அவர் பிப்.18ம் தேதி வெளியே சென்ற பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது சந்தேகம் அடைந்து, விசாரித்தனர். அதில் சங்கர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது. காமாட்சிபாளையாவை சேர்ந்த மாலா என்பவரை திருமணம் செய்த சங்கர்,கடந்த 2008ம் ஆண்டு அவரை கொலை செய்தார். இது குறித்து காமாட்சிபாளையா போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர். அவரை சிறையில் அடைத்த போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அடிக்கடி பரோலில் வெளியே வந்துள்ளார். அப்போது கணவனை இழந்து தவித்த ரேகாவை திருமணம் செய்து கொண்டார். 11 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறை நிர்வாகம் அவரை விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த அவர் கடந்த பிப்.16ம் தேதி போலீசாருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். நேராக ரேகாவை சந்தித்த அவர் பிப்.18ம் தேதி அவரை உப்பார்பேட்டை ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவரிடம் இருந்து நகைகளை பறித்துக் கொண்ட அவர் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தது தொடர்பாக வி.வி.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது உப்பார்பேட்டை போலீசார் கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த இருவேறு வழக்கு தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து சங்கரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murderer ,prisoner ,hotel room , The young girl, the murderer, the clutches
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...