மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை சேர்ந்த துரைராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஒரத்தநாடு இந்திரா நகர் பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி, காலை, மாலை நேரங்களில் 3 மணிநேரத்திற்கும் மேலாக வழிபாடு செய்வதால் பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இவ்வழக்கில் தமிழக டிஜிபி, உள்துறை செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி, உள்துறை செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி