பெங்களூரு: மக்களவை தேர்தலில் மஜத.வுக்கு 7 தொகுதி ஒதுக்குவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதற்கு முதல்வர் எச்.டி. குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது தொடர்பாக தேசிய தலைவர்கள் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள் என்றார்.
அவரிடம், ‘காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மஜதவுக்கு மக்களவை தேர்தலில் 7 தொகுதிகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எச்.டி. குமாரசாமி, ‘‘நாங்கள் பிச்சைக்காரர்கள் கிடையாது. கூட்டணி அரசு அமைந்த பின் மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி பணிகள் செய்து கொடுப்பதில் முழு கவனம் செலுத்திவருகிறேன். தொகுதி பங்கீடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி