பெங்களூரு: பெங்களூரு எலகங்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சூரியகிரண் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, விபத்திற்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். பெங்களூரு எலகங்காவில் இன்று 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்குகிறது. விமான கண்காட்சியில் சாகசம் செய்வதற்காக அனைத்து விமானிகளும் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர். அதில் சூரிய கிரண் என்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான இந்த விமானத்தை நேற்று விமானிகள் இயக்கினர். அதில் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கை இருந்தது. மற்றொரு விமானத்தில் ஒரு இருக்கை மட்டுமே இருந்தது. இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் எலகங்கா விமானப்படை தளத்தில் இருந்து மேலே கிளம்பி வானில் பறந்தன. சுமார் 100 மீட்டர் இடைவெளியில் பறந்து கொண்டு இருந்த விமானங்களில் ஒரு விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. அந்த விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதியது. இரண்டு விமானங்களும் நிலை தடுமாறி தரையில் விழுந்தன. மின்னல் வேகத்தில் நடந்த இந்த விபத்தில் 2 விமானங்களும் எரிந்து சாம்பலாயின. ஒரு விமானி உயிரிழந்தார். பாராசூட்டில் பறந்த 2 விமானிகள் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி