புதுடெல்லி: அனைத்து அவசர உதவிகளுக்கும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஒரே எண்ணாக 112 எண் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர உதவி எண் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார். ஆம்புலன்ஸ், காவல்துறை, தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் 112 என்ற ஒரே தொலைபேசி எண் இன்று முதல் அறிமுகமாகிறது. பொதுவாக காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்துறைக்கு 101, சுகாதாரத்துறைக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்பன உட்பட பல்வேறு சேவைகளுக்கு பல்வேறு உதவி அழைப்பு எண்கள் இருந்தன.
இந்த நிலையில், அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் இந்த அவசர உதவி எண் வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 112 இந்தியா என்ற மொபைல் செயலியையும் உள்துறை அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியில் ஆபத்துக்குள்ளாகும் பெண்கள், அருகாமையில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் வசதியும் இடம் பெற்றுள்ளது. 112 ஹெல்ப் லைனின் பதற்ற கால அவசர அழைப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி