வேலூர்: காட்பாடி அருகே பஸ்சில் பயணம் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த மூதாட்டியின் சடலத்தை கண்டக்டரும், டிரைவரும் சேர்ந்து சாலையில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்ல மூதாட்டி ஒருவர் பாகாயம் வரை செல்லும் தனியார் பஸ்சில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஏறினார். சிறிது தூரத்தில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் வந்தபோது பஸ்சில் இருந்த மூதாட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கூறியுள்ளனர். அவர்கள் பார்த்தபோது, மூதாட்டி இறந்தது தெரிந்தது. அவருடன் யாரும் இல்லாததால் சடலத்தை டிரைவரும், கண்டக்டரும் சித்தூர் பஸ் நிலையம் அருகே சாலையோரம் போட்டு,
அவரது பையில் இருந்த சால்வையை எடுத்து மூடிவிட்டு பஸ்சை எடுத்து சென்றுவிட்டனர். தகவலறிந்த காட்பாடி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பூஷணம்(60) என்பதும், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது. அவரது மகன் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காரில் தாயின் உடலை சொந்த ஊரான செய்யாறுக்கு கொண்டு சென்றார். மனிதாபிமானமின்றி மூதாட்டியின் சடலத்தை சாலையில் வீசி சென்ற கண்டக்டர், டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி