ஜோலார்பேட்டை: ஏலகிரி மலை காப்பு காட்டில் குடிநீர் இன்றி விலங்குகள் அவதிப்பட்டு வருகிறது. இதில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள காப்புக் காட்டில் மான், கரடி, காட்டுப்பன்றி, குரங்கு, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், காட்டு விலங்குகளான மான், முயல், காட்டுப்பன்றி போன்றவை தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.
அப்போது சில சமூகவிரோதிகளால் வேட்டையாடப்பட்டும், சில சமயங்களில் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதியும் வன விலங்குகள் உயிரிழக்கிறது. மேலும், சாலையோரங்களில் உள்ள குரங்குகள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. தண்ணீருக்காக ஓடிவரும் குரங்குகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சிலர் குடிநீர் வழங்கி வருகின்றனர். எனவே வனத்துறை அதிகாரிகள் குடிநீர் இன்றி தவித்து வரும் வன விலங்குகளுக்கு ஏலகிரி மலையில் தொட்டி அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி