×

50,000 வெளிநாட்டு பறவைகள் குவிந்தன இந்தாண்டு கஜகஸ்தான் ‘ரப்’ புதுவரவு: வடுவூர் சரணாலயத்தில் சீசன் உச்சக்கட்டம்

மன்னார்குடி,: வடுவூர் பறவைகள் சரணாயலத்தில் சீசன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு சுமார் 50,000 பறவைகள் வெளிநாடுகளில் இருந்து குவிந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் ஏரியில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் எந்த நேரமும் இங்கு ரம்மியமான சூழல் நிலவும். மேலும் பறவை களுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது. அதனால் இங்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றன. வழக்கமாக செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை இங்கு சீசன் காலமாகும். தற்போது சீசன் களை கட்டியுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு பறவைகள் அதிகமாக வந்துள்ளது. இந்நிலையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் வன உயிரியல் விஞ்ஞானி  டாக்டர் குமரகுரு தலைமையில் வேலூர் விஐடி பல்கலைக் கழக பேராசிரியை சாய் சரஸ்வதி தலைமையில் 18 மாணவ,

மாணவிகள் மற்றும் பறவை ஆர்வலர்கள்  பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டனர். இதில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இந்த ஆண்டு அதிக அளவில் வந்திருப்பதும், குறிப்பாக கஜகஸ்தான் நாட்டிலிருந்து ரப் என்ற பறவையினம் இந்த ஆண்டு வடுவூருக்கு புதிதாக வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வன உயிரியல் விஞ்ஞானி  டாக்டர் குமரகுரு கூறுகையில், வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு  மத்திய ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆசியா, கஜகஸ்தான், ஆப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்துள்ளன. இதில்  நில பறவைகள், நீர் பறவைகள் என  2 வகைகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.   அதில் 53 வகைகளை சேர்ந்த 46514 நீர் பறவைகள், 61 வகைகளை சேர்ந்த 1996 நிலப்பறவைகள் என மொத்தம் 48510 பறவைகள் வந்துள்ளன.

புள்ளி மூக்கு வாத்து, ஊசி வாய் வாத்து, வெள்ளை அரிவாள் மூக்கன், பணங்கொட்டை சிறவி, அகல வாழ் சிறவி, ரப் உள்ளிட்ட 114 ரகங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் வந்துள்ளன.   23 வகையான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து வந்துள்ளன என கூறினார். கடந்தாண்டு இதே கால கட்டத்தில் சுமார் 40,000 பறவைகள் வந்திருந்தன. இந்தாண்டு கூடுதலாக சுமார் 9,000 பறவைகள் வந்துள்ளன. ஆண்டுக்காண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக சரணாலய அலுவலர்கள் தெரிவித்தனர். வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஏப்ரல் மாதம் வரை பறவைகள் தங்கி இருக்கும் என்பதால் தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் உற்சாகத்துடன் பறவைகளை கண்டு ரசிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kazakhstan ,Rup' Newcomers ,Vaduvur Sanctuary , Foreign Birds, Vaduvur Sanctuary
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் எலனா ரைபாகினா