ஸ்ரீநகர் : ‘‘காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் தாமதம்தான், காஷ்மீரில் நடக்கும் பேரழிவுக்கு காரணம். இதற்கு முடிவு கட்ட, காஷ்மீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும்’’ என பிரிவினைவாத தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மிர்வாயிஸ் உமர் பரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:காஷ்மீர் மண்ணில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் காஷ்மீர் மக்கள் மற்றும் தலைவர்கள் வருந்துகின்றனர். காஷ்மீர் பிரச்னை தீர்வு காண்பதில் ஏற்படும் தாமதம் தான், காஷ்மீரில் நடக்கும் பேரழிவுக்கு காரணம். கொலை, பதில் கொலைகள் முடிவுக்கு வரவேண்டும் என்றால், இங்கு அமைதியை ஏற்படுத்த நாம் உண்மையிலேயே விரும்பினால், வெறுப்புகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதியுடனும், நேர்மையுடனும் முத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி