டெல்லி : திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலுக்கு மனு தாக்கலும் செய்யப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கினர்.
இதையடுத்து கஜா புயல் பாதிப்பு காரணத்தினால் தற்போது தேர்தல் நடத்தும் சூழல் மேற்கண்ட தொகுதியில் கிடையாது எனவும், அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேப்போல் தலைமை தேர்தல் ஆணையத்திலும் அவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதேப்போல் இந்த வழக்கு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டது.
உடனே தேர்தல் நடத்தக் கோரி மனு தாக்கல்
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த கேகே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,”தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதியின் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இதற்கு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அமர்வு, தேர்தல் தொடர்பான மனுதாரரின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் மாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பின்வருமாறு, தேர்தலை நடத்துவது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மேலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அதைப் பற்றியும் எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி