சென்னை: திருமணம் செய்யாமல் என்னுடன் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி என் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக, தற்கொலைக்கு முன்பு துணை நடிகை தனது தாய்க்கு உருக்கமான வீடியோ ஒன்று அனுப்பி உள்ளார். இதையடுத்து வீடியோ அடிப்படையில் காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மேரி ஷிலா ஜெபராணி( எ)யாஷிகா(21). 6 மாதங்களுக்கு முன் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தார். வடபழனியில் தனியார் விடுதியில் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடிவந்தார். மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சின்னத்திரையில் யாஷிகா சிறு வேடங்களில் நடித்து வந்தார். செல்போனில் ரீசார்ஜ் செய்ய விடுதியின் அருகே உள்ள செல்போன் கடைக்கு யாஷிகா அடிக்கடி செல்வார். அப்போது கடையில் வேலை பார்க்கும் பெரம்பூரை சேர்ந்த மோகன் பாபு (22) என்பவருடன் நட்பு ஏற்பட்டு காதலானது.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம். அதுவரை கணவன் மனைவி போல் வாழலாம் என்று மோகன்பாபு கூறியதால் இருவரும் கடந்த மாதம் பெரவள்ளுர் ஜி.கே.எம்.காலனி 22வது தெருவில் ஒரு வீட்டில் குடியேறினர். படப்பிடிப்புக்கு போகும்போது சில நாட்கள் இரவில் வரமுடியாமல், அதிகாலை யாஷிகா வீட்டுக்கு வந்துள்ளார். மோகன்பாபுவுக்கு இது பிடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்தது. ஒருகட்டத்தில் மோகன் பாபு வீட்டுக்கு வராமல் பல காரணங்களை சொல்லி தவிர்த்து வந்தார். இதனால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என அவரிடம் யாஷிகா கூறினார். இதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது. யாஷிகாவை விட்டு பிரிந்து மோகன்பாபு தன் பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிட்டார். யாஷிகாவின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யாஷிகா நேற்று முன்தினம் வீட்டின் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து பெரவள்ளுர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யாஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் துணை நடிகை யாஷிகாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது யாஷிகா தற்கொலைக்கு முன்பு தனது தாய்க்கு உருக்கமாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவு கிடைத்தது. அதில், ‘சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்த எனக்கு உதவி செய்வது போல் நடித்து மோகன்பாபு என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு திருமணம் ஆசை காட்டினார். அதை நம்பி மோகன்பாபுவுடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தினோம். பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேச்சு எடுத்தாலே என் மீது வெறுப்பை கொட்டினார். கடைசியாக திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றி விட்டார்.
எனது தற்கொலைக்கு மோகன்பாபு தான் காரணம். அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். என்னைப் போல் யாரும் மோகன் பாபுவிடம் ஏமாறக் கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது. துணை நடிகையின் தாயும் வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் மோகன் பாபு மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் மோகன்பாபுவை பிடித்து துணை நடிகையின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி