சென்னை: காதலிக்க மறுத்ததால், பள்ளி மாணவியை கடத்திச் சென்று தனது நண்பர்கள் நான்கு பேருடன் கூட்டு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது கொலை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கொத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணியம் என்பவரின் மகள் சரிதா (15). கீச்சலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வழக்கம் போல் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து சுப்பிரமணியம் அன்று மாலையே பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கீச்சலம் கிராமத்திற்கு அருகில் ஓடையில் துண்டு துண்டாக எலும்புகள், பள்ளி மாணவி சீருடை, செருப்பு இருப்பதை பார்த்த விவசாய கூலித் தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ், பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதில் ஓடையில் இருந்த எலும்புகள், சீருடை, செருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சந்தேகத்தின்பேரில் மாயமான மாணவியின் பெற்றோரை வரவழைத்து உறுதி செய்தனர். அப்போதுதான் பள்ளி சீருடை, செருப்பு ஆகியவை தங்கள் மகள் அணிந்து சென்றது தான் என்று சொல்லி கண்ணீர் மல்க கதறி அழுதனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆய்வு செய்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்கள் சேகரித்தும், மருத்துவ குழுவினர் துண்டுகள் இருந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது கால் கொலுசு, கை விரலில் அணிந்துருந்த மோதிரம் கண்டெடுக்கப்பட்டது. மாணவி கொலை சம்பவம் தொடர்பாக திருத்தணி டி.எஸ்.பி சேகர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், ருக்மாங்கதன், முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்படது.
இந்த விசாரணையில் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி உறவினர் இறந்த சரிதாவின் முறை மாமன் சங்கரய்யா(21) என்ற வாலிபர் சரிதாவை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததும், இருப்பினும் சரிதா காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மாணவி மீது சங்கரய்யாவுக்கு கோபம் அதிகரித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று காலை பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த மாணவியிடம் பேச்சு கொடுத்து கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள நாதமுனி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் கூட்டு சேர்ந்து மாணவியை ஐந்து நாட்கள் அதே பம்ப் செட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மாணவியை வெளியில் விட்டால் நடந்த சம்பவத்தை பற்றி கூறிவிடுவார் என நினைத்து ஐந்து நாட்கள் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து பம்ப் செட் அருகில் புதைத்து விட்டனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக சங்கரய்யாவுக்கு அவரது கூட்டாளிகள் 4 பேரும் ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர். இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மாணவியை கொலை செய்து உடலை புதைத்த பகுதிக்கு அருகில் விவசாய நிலத்தில் பயிர் மகசூல் பணி இருந்ததால், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்து ஐந்து பேரும் மீண்டும் ஒன்று கூடி இரவு நேரத்தில் புதைத்த மாணவி உடல் தோண்டி எடுத்துச் சென்று ஓடையில் புதைத்து விட்டதாக போலீசாருக்கு வாக்கு மூலத்தில் சங்கரய்யா தெரிவித்துள்ளார். தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் கடத்திச் சென்று கூட்டாளிகளுடன் ஐந்து நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி