வேலூர்: வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதத்தால் உடல் சோர்வடைந்த முருகனுக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், 7 பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்கக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அவரது மனைவி நளினியும் கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தை கை விடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், முருகனுக்கு நேற்று உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறை மருத்துவமனையில், சிறை டாக்டர்கள் மூலம் அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து முருகனின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினியும் உடல் சோர்வாக காணப்படுகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி