பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இதில் டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும்.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சில மாதமாக தொடர்ந்து பெய்தது. அதன்பின் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மழைப்பொழிவு இல்லை. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் துவக்கத்தியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரங்களில் இருக்கும் இலைகள் விழுந்து சருகுகளாக காணப்படுகிறது. டாப்சிலிப் மற்றும் பரம்பிக்குளம் செல்லும் வழித்தடங்கள். பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி, நவமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து உள்ளது. மேலும், நீர்நிலைகள் வறண்டு வருவதால் விலங்குகள் இடம் பெயர்கிறது. இந்நிலையில் டாப்சிலிப் மற்றும் குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தீப்பிடிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதால், இலைகள் காய்ந்து சருகாக உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் இருப்பதால் வனத்திற்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. குறிப்பாக புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும். சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சமையல் செய்ய கூடாது. வனத்துறையின் விதி முறைகளை மீறி நடப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என வனதுறையினர் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி