×

காட்பாடி அருகே ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் சர்வதேச கடத்தல்காரர்களுக்கு தொடர்பு அம்பலம்: பட்டியலுடன் களமிறங்கியது சிபிசிஐடி

வேலூர்: காட்பாடி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச கடத்தல்காரர்களுக்கு தொடர்பிருப்பது  அம்பலமாகியுள்ளது.  செம்மரக்கட்டை கடத்தல்  வழக்கில் கைதாகி சமீபத்தில் வெளிவந்த குற்றவாளிகளை திட்டமிட்ட குற்றங்கள்  நுண்ணறிவு பிரிவு(ஓசிஐயு) தீவிரமாக  கண்காணித்து வருகிறது. கடந்த 2015ல் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சந்திரகிரி போலீசாரால் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதாகி கடந்த சில  மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த அமானுல்லா(32) என்பவரையும் ஒசிஐயுவினர் ரகசியமாக  கண்காணித்து வந்தனர். இதில் அவர் மீண்டும் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது.இதையடுத்து ஒசிஐயு டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் ஆந்திர எல்லைகளில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து பரதராமி, பனமடங்கி வழியாக வந்த சரக்கு வேனை பின்தொடர்ந்து சென்றனர். அந்த வேன்  கரசமங்கலத்தில் உள்ள அமானுல்லா வீட்டிற்கு சென்றது.

இதையடுத்து வேனில் இருந்து செம்மரக்கட்டைகள் வீட்டில் எடுத்துச் செல்ல தொடங்கினர். அப்போது, வீட்டின் உள்ளே செம்மரக்கட்டைகளுடன் சென்ற  அமானுல்லா மற்றும் அதே பகுதியை சேர்ந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 5.5 டன் செம்மரக்கட்டைகளை  பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லத்தேரி போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்  அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை விசாரணையில் தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவிலான  கும்பலுக்கு செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து இந்த வழக்கை எஸ்பி பிரவேஷ்குமார் சிபாரிசின்படி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து ஆவணங்களையும் தனிப்படை போலீசார் நேற்று  சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள், சர்வதேச அளவில் செம்மரக்கட்டை விவகாரத்தில் தொடர்பு வைத்திருப்பவர்களின் பட்டியலுடன் துப்பு துலக்க  தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு  சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காட்பாடியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு மீண்டும்  சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து தொடர்புடைய முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.

காவல்துறைக்கு தகவல் ெசான்ன தாய்: செம்மரக்கடத்தல் வழக்கில் குற்றவாளி அமானுல்லாவை கைது செய்ய அவரது தாய் நூர்ஜகானே உதவியுள்ளார். மகன் கடந்த 4 மாதங்களாக தவறான வழிக்கு  செல்வதை கண்டித்து அவ்வப்போது கடுமையாக திட்டியுள்ளார். ஆனால், அவர் கேட்காததால் மனம் பொறுக்க முடியாமல் அவரே மகன் பற்றியும் வீட்டில்  செம்மரக்கட்டைகள் இருப்பது பற்றியும் காவல் துறைக்கு தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே காவல் துறையினர் வாகனசோதனை நடத்தி  அமானுல்லாவை கைது செய்ததுடன் வீட்டில் இருந்த செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அமானுல்லாவின் தாயார் செயலை ஊர்மக்கள் வெகுவாக  பாராட்டினர்.

வனத்துறை மீது சந்தேகம்: பனமடங்கி அருகே ஆந்திர- தமிழகத்தை இணைக்கும் கொட்டாளம் கூட்ரோட்டில் தமிழக வனத்துறையினர் 24 மணிநேரமும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், அவ்வழியாக பல நாட்களாக செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிகிறது. இதனால், வனத்துறையினருக்கு தொடர்பிருக்கலாம்  என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பேரிலும், சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Katpadi ,hijackers , Katpadi, Red Cross, International Hijackers, CBCID
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி