சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக்காக பேசி வருகிறோம் என்று தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார். தேமுதிக 19ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதேபோன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றும் விழா நடந்தது. இதில், கட்சியின் துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுக்கிறேன். எந்த தொகுதி என்பதை தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வார். அதிமுக, பாஜ மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணிக்காக பேசி வருகிறோம். 2 வாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாடு திரும்பியவுடன் அவரிடம் அறிக்கை அளிப்போம். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கூட்டணி உறுதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி