சென்னை: டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, நிதிநிலை அறிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறுகையில், ம்யூசிக்கலி, டிக் டாக் செயலி மூலமாக ஆபாச செயல்களும், சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதால், அந்த செயலியை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், ப்ளூ வேல் சர்வர் ரஷ்யாவில் இருந்த போது அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மூலமாக தமிழக அரசு மேற்கொண்டது. அதேபோன்று டிக் டாக் செயலியையும் தடை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் பதிலளித்துள்ளார். இந்த செயலியின் தலைமை இடத்தை கண்டறிந்து தமிழகத்தில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் டிக்டாக் செயலி மூலம் பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் பலருடைய கருத்துக்களை பகிரக்கூடிய வகையிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதனால் சமூகவலைத்தளங்களில் பல்வேறு சீர்கேடுகளை உருவாக்குகிறது என்ற புகார்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, சட்டஒழுங்கு பிரச்சனை மற்றும் ஆபாச செயல்களுக்கு வழிவகுத்து, சமூக சீர்கேடான செயல்களை செய்வதற்கு தூண்டப்படுவதால், உடனடியாக தடை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். இது இளைஞர்களை சீரழிக்க கூடியதாக இருப்பதாலும், அதேநேரத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்தும் டிக் டாக் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்து வருவதனால், இந்த செயலுக்கு தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி