சென்னை: மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை பட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் அன்புமணி தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஐ.எஸ்.மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது. அன்புமணி தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர் முகில் குப்தா தனது வாதத்தில், “இந்த வழக்கில் அன்புமணிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. துறை செயலாளர்கள் தயாரித்து, ஒப்புதல் அளித்த கோப்பிலேயே தான் அன்புமணி கையெழுத்திட்டார். துறை ரீதியான நிபுணர்கள் குறிப்பின்படியே அன்புமணி கையெழுத்திட்டார்.
மேலும் அவரது அமைச்சர் பதவி காலம் முடிந்து ஒரு ஆண்டு கழித்தே இந்திய மருத்துவ கவுன்சில் அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது. புகார் எழுந்தவுடன், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து, அனைத்து அடிப்படை வசதியும் சரியாக உள்ளது எனக்கூறியது. எனவே அனுமதியளித்ததில் மாற்றம் செய்ய வேண்டாம் என பரிந்துரைத்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றமும் அதை ஆமோதித்தது. ஆனால் இதனை மீறி அன்புமணி மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் செயல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்’ என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 13ம் தேதி அதாவது நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி