சென்னை: மத்திய அரசின் அழுத்தத்துக்கு உட்பட்டு களங்கத்துக்கு ஆளாக வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு வைகோ அறிவுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் இணைத்து நடத்துவது தான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்க வேண்டும். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையம் எந்தவிதமான பாரபட்சத்துக்கும் இடம் தராமல், ஆளும் கட்சிக்கு அணுசரணையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்படும் போதுதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.
மத்திய அரசு அந்த அழுத்தத்துக்கு உடன்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், ஜனநாயகக் கோட்பாட்டுக்கு கேடு செய்கின்ற குற்றவாளி என்ற சரியான குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும். எனவே ஜனநாயகத்துக்கு விரோதமாக தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. களங்கத்துக்கு ஆளாக வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி