வந்தவாசி: சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நில அளவீடு செய்யப்பட்டது. விவசாயிகள் கடும் எதிர்ப்பு, நீதிமன்ற தடையால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே எடுக்க இருந்த நிலத்தின் அருகாமையில் கூடுதலாக நிலம் எடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் நடத்தப்போவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் கலந்துகொள்ள வந்த விவசாயிகளை போலீசார் சோதனை செய்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளை போல் விவசாயிகளை போலீசாரும், வருவாய் துறையினரும் நடத்துகின்றனர் என்று கோஷங்கள் எழுப்பி அலுவலகம் செல்லாமல் மெயின் கேட் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
உடனே, பசுமை வழிச்சாலை நிலம் கையப்படுத்தும் பிரிவு தாசில்தார்கள் பாஸ்கரன், திருமலை ஆகியோர் விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், பதில் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாலை 5 மணிவரை அதிகாரிகள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் போலீசாருக்கும், வருவாய் துறைக்கும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பி கலைந்து சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி