புதுடெல்லி: டிவிட்டர் சிஇஓ ஜேக் டார்சே, வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்றக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது பற்றி ஆலோசிக்க கடந்த 7ம் தேதி வருமாறு, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜேக் டார்சேவிடம், தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்றக்குழு கூறியிருந்தது. இதற்கு காலஅவகாசம் கேட்கப்பட்டதால், இதற்கான தேதி நேற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நேற்றைய கூட்டத்துக்கு ஜேக் டார்சே ஆஜராகவில்லை. அவருக்கு பதில், டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் ஆஜராயினர். இதற்கு கண்டனம் தெரிவித்த நாடாளுமன்ற குழு தலைவரும், பா.ஜ எம்.பியுமான அனுராக் தாக்கூர், டிவிட்டர் சிஇஓ மற்றும் இதர பிரதிநிதிகள் வரும் 25ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளார். நேற்றைய கூட்டத்தில் ஆஜராகாத ஜேக் டார்சே மீது, உரிமை மீறல் உட்பட கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பது பற்றியும் நாடாளுமன்ற குழு ஆலோசித்து வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி