சென்னை: சுவிட்சர்லாந்தை சேர்ந்த எப்சி பாஸல் அணி, திறமையான இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் கோவையில் கால்பந்து பயிற்சி அகடமியை தொடங்குகிறது.சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாம்பியன் கால்பந்து அணி எப்சி பாஸல். ஐரோப்பிய முன்னணி கால்பந்து அணிகளான மான்செஸ்டர் யுனைட்டட், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிகளை வீழ்த்தியுள்ளது. இந்த அணி ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் 26 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. வெளிநாட்டு கால்பந்து நிறுவனம் இந்திய கிளப் அணியின் பங்குகளை வாங்குவது இதுவே முதல்முறையாகும்.
‘இந்த பங்கு விற்பனை காரணமாக சென்னை எப்சி அணியில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம். தொழில்நுட்பம், மேம்பாட்டு நெறிமுறைகள் குறித்து இரண்டு அணிகளிலும் பரிமாற்றம் செய்துகொள்வோம். இதனால் இந்திய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி, ஆடுகளம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கிடைக்கும். இந்தியாவில் திறமையான இளம் கால்பந்து வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த வசதியாக, கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடங்க உள்ளோம். இதில் 10 முதல் 18 வயதுடைய திறமையான வீரர்கள் சேர்ந்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கு தங்குமிடம், தரமான உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். கூடவே சிறப்பான கல்வியும் அளிக்கப்படும்’ என்று பாஸல் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி