×

3-வது டி20-ல் போராடி தோற்றது இந்தியா..... 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டியிலும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச தீர்மானித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ-சேபெர்ட் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சேபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நியூசி., கேப்டன் வில்லியம்சன் பொறுமையாக கம்பெனி கொடுக்க, முன்ரோ இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர் 40 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடி காட்டியதால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டுகளையும், கலீல், புவனேஸ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை  வீழ்த்தினர்.

இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Sri Lanka ,D20 India ,New Zealand , New Zealand vs India, 3rd T20I
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..