பெங்களூரு: விவசாய கடன் தள்ளுபடிக்கு பட்ஜெட்டில் ரூ.12,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் குமாரசாமி அதிரடியாக அறிவித்தார். காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசின் பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.2,34,153 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். விவசாயிகள் வாழ்வு செழிக்கவும், பள்ளி மாணவர்கள் மகிழும் வகையிலும் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்துள்ளார். பள்ளி கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 151 கோடி ஒதுக்கியுள்ளார். தனது ஆட்சி காலம் முடிவதற்குள் விவசாயிகள் வாங்கியுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை செயல்படுத்தும் வகையில் முதல்வர் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.12,650 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மக்களவை தேர்தல் வருவதால் புது வரிகள் எதுவும் விதிக்காமல் தவிர்த்துள்ள அதே சமயத்தில் அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பீர் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளார்.
சந்தியா-சுரக்ஷா திட்டத்தின் கீழ் முதியோர்கள் தற்போது வாங்கிவரும் மாதாந்திர உதவிதொகையான 600 ரூபாயை ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளார். மறைந்த சித்தங்கா மடத்தின் மடாபதி சிவகுமாரசாமி மற்றும் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி பாலகங்காதாரநாத சுவாமி ஆகியோர் பிறந்த கிராமங்களில் தலா ரூ.25 கோடி செலவில் பாரம்பரிய நினைவிடங்கள் அமைக்கப்படும். அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் 4 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் குமாரசாமி அறிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி