நியூயார்க்: பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனத்தின் பாஸ்வேர்டு தெரிந்த அதிகாரி இறந்து விட்டார். இதனால் முதலீட்டாளர்களுக்கு 25 கோடி டாலரை (ரூ.1800 கோடி) திருப்பித்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பிட்காயின் போன்ற கரன்சிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை சட்டவிரோதமானவை என்றாலும் இந்தியர்கள் சிலர் இதில் முதலீடு செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் வைக்கப்பட்ட பிட்காயின் ஏடிஎம் மூடப்பட்டது. கிரிப்டோ கரன்சி எனப்படும் இவை, முழுக்க முழுக்க மின்னணு வடிவிலானது. பாஸ்வேர்டு மூலமாகத்தான் இவற்றை பாதுகாத்து வைத்துள்ளனர். பாஸ்வேர்டு மறந்தால் அவ்ளோதான். இதே கதி கிரிப்டோ நாணய பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்துக்கே ஏற்பட்டுள்ளது. கனடாவில் குவாட்ரிகா சிஎக்ஸ் என்ற கிரிப்டோ நாணய பரிமாற்ற நிறுவனம் இயங்கி வருகிறது.
இதன் தலைமை செயல் அதிகாரி ஜெரால்ட் காட்டன். இந்த கம்பெனியில் முதலீடு செய்து வைத்துள்ள கிரிப்டோ நாணயம் முழுக்க இவர் பொறுப்பில்தான் உள்ளது. பாஸ்வேர்டு கூட இவரை தவிர யாருக்கும் தெரியாது.30 வயதான ஜெரால்டு காட்டன், குடலியக்க அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த டிசம்பரில் ஆதரவற்றோர் இல்லம் திறந்து வைக்க இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 9ம் தேதி இவர் இறந்தார். இதுகுறித்து இந்த நிறுவனம் கடந்த மாதம் 14ம் தேதி பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டது. இது பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சில் முதலீடு செய்தவர்களை கலக்கத்தில் ஆழ்த்திவிட்டது. காரணம், ஜெரால்டு காட்டனை தவிர யாருக்கும் பாஸ்வேர்டு தெரியாது. இதில் முதலீடு செய்த 25 கோடி டாலரை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, இந்த நிறுவனமும் தற்போது செய்வதறியாது கையைப்பிசைந்து வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி