சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலையம், விமான நிலைய குடியிருப்பு பகுதிக்கு ேதவையான தண்ணீர் பம்ப் அவுஸ் கட்டிடம் உள்ளது. அதன் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மரத் துண்டுகள் மற்றும் குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அந்த குப்பையும், மரத்துண்டுகளும் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அந்த வழியில்தான் விமானங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருள் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் செல்வது வழக்கம்.
இப்படி முக்கியான பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த சாலையில் எந்தவித வாகனங்களும் செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டது. விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கும் அவசர தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஆனாலும், இந்த தீ எப்படி ஏற்பட்டது என்றும் யாராவது புகைப்பிடித்து விட்டு சிகரெட் துண்டுகளை கீழே போட்டதால் தீப்பிடித்ததா அல்லது சமூக விரோதிகள் யாராவது தீ வைத்தனரா என்று விசாரித்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி