×

கோவையில் இருந்து ரயிலில் கேரளாவுக்கு கடத்திய ரூ.2 கோடி ஹவாலா பணம் சிக்கியது: 5 வாலிபர்கள் கைது

பாலக்காடு: கோவையில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.2 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், பாலக்காடு ரயில் நிலையத்தில் நேற்று ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் ஷாஜி தலைமையிலான போலீசார் பயணிகளிடம் பரிசோதனை நடத்தினர். பகல் 12.20 மணி அளவில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் வந்தது. போலீசார் ரயிலில் ஏறி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது கோவையில் இருந்து கொல்லம் செல்வதற்காக ஏறிய 5 வாலிபர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தனியாக அழைத்து சென்று, அவர்கள் அணிந்திருந்த ஓவர்கோட்டுகளை கழற்றி சோதனை செய்தபோது, அதில், புத்தம் புதிய 500, 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் அடங்கிய ரூ.2 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.

விசாரணையில் அவர்கள், கொல்லம் மாவட்டம் கேச்சேரியை சேர்ந்த ரமணன் மகன் சுரேந்திரன் (24), அதே பகுதியை சேர்ந்த சிவாஜி மகன் விவேக் (26), மகாராஷ்டிரா மாநிலம் ஜிகியை சேர்ந்த மாருதி மகன் பதம்சிங் (24), ராஜாராம் மகன் பிரமோத் (27), கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த விட்டல் மகன் பிரபாகர் (26) என்பதும், கோவையில் இருந்து இவர்கள் கேரளாவுக்கு கடத்தி சென்றது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். கோவையில் இருந்து ஹாவாலா பணத்தை யார் கொடுத்தது? இதை கேரள மாநிலத்தில் யாரிடம் கொடுக்க கொண்டு சென்றீர்கள்? என கைதான வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : youths ,Kerala ,Coimbatore , Coimbatore, train, Kerala, Hawala money
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்