மதுரை : கடலில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கடலில் சிலை அமைக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ராஜராஜ சோழனின் ஆட்சியும், கட்டிட கலையும் உலகளவில் போற்றப்பட்டு வரும் நிலையில், அவரது நினைவிடம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் கிராமத்தில் பராமரிப்பின்றி சிதைந்து கிடப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
பிற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி சிலை, சர்தார் வல்லபாய் படேல் சிலைகள் அமைக்கப்படுவதாக கூறியுள்ள அவர், ராஜராஜ சோழன் சிலையை இந்திய பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா பகுதியில் நிறுவ உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கும்பகோணம் உடையாளூரில் பராமரிப்பின்றி உள்ள சமாதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும், அதனை சுற்றுலா தலமாக அறிவிக்கவும் உத்தரவிட கோரியுள்ளார். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி