×

‘சிறையிலேயே உன் கதையை முடித்து விடுவேன்’ நிர்மலாதேவியை மிரட்டிய பெண் போலீஸ் அதிகாரி

* விரைவில் ஆதாரங்களை வெளியிடுவோம்
*  மதுரையில் வக்கீல் திடுக்கிடும் தகவல்
மதுரை: சிறையிலேயே உன் கதையை முடித்து விடுவேன் என நிர்மலாதேவியை பெண் போலீஸ் உயரதிகாரி மிரட்டியதாக, அவரது வக்கீல் பேட்டி அளித்தார்.  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சிறையில் நேற்று மாலை, இவரது வக்கீல்கள் பசும்பொன் பாண்டியன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் இவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:நிர்மலாதேவி கடந்த 10 மாதங்களாக சிறையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளார். இதனால் இவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இழுத்து சென்றதால் நெஞ்சுவலி ஏற்பட்டு, கடந்த 2ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது சீருடை அணியாத காவல்துறை பெண் உயரதிகாரி ஒருவரால் மிரட்டப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பத்திரிகையாளர்களை சந்திக்கக்கூடாது, வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை சொல்லக்கூடாது. வழக்கறிஞர்களையும் மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தேர்தல் முடிந்தவுடன் ஜாமீனில் வெளியே செல்லலாம். இல்லையென்றால் சிறைக்குள்ளேயே உன் கதை முடிந்துவிடும் என மிரட்டி உள்ளார். அவரது குடும்பத்தாரும் மிரட்டப்படுகின்றனர். இதனால் அவர் பயந்தநிலையில் உள்ளார்.

சிறையில் நிர்மலாதேவிக்கு பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரத்தில் அரசு ஏன் மவுனமாக உள்ளது? நிர்மலாதேவியின் உடல்நலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் எம்பிக்கள், அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள், பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. அதை எங்கு வெளியிட வேண்டுமோ அங்கு நிச்சயமாக வெளியிடுவோம். நிர்மலாதேவி சிலரிடம் வழங்கிய போட்டோ வீடியோ ஆதாரங்களை, சிபிசிஐடி போலீசார் மிரட்டி எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஜாமீனுக்கு தொடர்ந்து தடை ஏற்படுத்தினால், நீதிமன்றத்திற்கு வரும் நிர்மலாதேவி தானாகவே பல்வேறு தகவல்களை ெவளியிடுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woman police officer ,jail ,Nirmaladevi , 'I'll finish ,story, jail' woman police, officer,threatened Nirmaladevi
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!