×

மழைப்பொழிவு இன்றி ஆழியார், பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் சரிகிறது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டத்தில் சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய அணைகள் முக்கியமானவையாகும். இதில், சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணை வழியாக, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர்  கொண்டு வரப்படுகிறது. அங்கு மின் உற்பத்திக்கு பிறகு தண்ணீர் வெளியேற்றப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக, ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில், பொள்ளாச்சியை அடுத்த 120டி கொண்ட ஆழியார் அணைக்கு காண்டூர் கால்வாய் மட்டுமின்றி சின்னாறு, அப்பர் ஆழியார், குரங்கு அருவி ஆகியவற்றில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

கடந்த ஆண்டில், ஜூன் முதல் பல மாதமாக பெய்த தென்மேற்கு  பருவமழையால் ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்திருந்தது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகமானது. அதன்பின், நவம்பர் மாதத்தில் ஓரிரு நாட்களுக்கு பிறகு மழை இல்லாமல் போயிற்று. இதன் காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது. தற்போது வினாடிக்கு 180  முதல் 200கன அடிக்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், கடந்த டிசம்பர் மாதம் இறுதிவரை 110 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்றைய நிலவரப்படி 63அடியாக சரிந்துள்ளது.

இருப்பினும், ஆயக்கட்டு பாசன பகுதி மற்றும் கேரள மாநில பகுதிக்கு என விநாடிக்கு சுமார் 650 கன அடிவீதம் தண்ணீர் திறப்பு உள்ளது. அதுபோல், மழைப்பொழிவு இல்லாததால், மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி  பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு வெறும் 20 கன அடி தண்ணீர் வரத்து மட்டுமே  இருந்தது. இருப்பினும் வினாடிக்கு 1100 கன அடிவீதம் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் 65 அடியாக இருந்த பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தற்போது 53அடியாக சரிந்துள்ளது. மழைப்பொழிவின்றி அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சாகுபடிக்கு போதிய நீர் இன்றி விவசாயிகள் கவலையடைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aliyar ,Parambikulam , Rain, Aliyar, Parambikulam dam
× RELATED கடமான் மீது பைக் மீது மோதியதில் வாலிபர் பலி