×

இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

காத்மாண்டு: இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேஷியாவில் அடிக்கடி ஏற்படும் சுனாமியும், ஜப்பானில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்களையும் நாம் வெறும் செய்திகளாகவே கடந்து விடுகிறோம். ஆனால் அவை எதிர்காலத்தின் விளைவை நமக்கும் உனர்த்தும் எச்சரிக்கை மணிகள் ஆகும். துருவ பகுதிகளை தவிர்த்து உலகில் அதிகப்படியான பனிக்கட்டிகள் கிடைப்பது இமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள கே-2 மற்றும் எவரெஸ்ட் மலைச்சிகரங்களில் தான்.

இமயமலை மற்றும் இந்து குஷ் மலைப்பகுதிகளில் உள்ள பனிமலைகள் தான் உலகின் முக்கியமான 10 நதிகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3,500 கி.மீ பகுதிகளில் பரந்து விரிந்துள்ள இந்த மலைத்தொடர்களின் வாயிலாக கங்கை, சிந்து, மஞ்சள் நதி, மேகாங் நதி போன்ற முக்கிய ஆறுகளும் பாய்ந்தோடி அப்பகுதிகளை வளம் கொழிக்க செய்கின்றன. இந்நிலையில், ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அதில், உலகில் வெளியிடப்பட்டு வரும் வெப்ப வாயுக்களின் விகிதம் குறைக்கப்படாவிட்டால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு 2100ம் ஆண்டிற்குள் உருகிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவது பாரிஸ் உடன்படிக்கையில் இலக்காகும். இதை அடிப்படையாக கொண்டு, உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் வைத்தாலும் கூட குறைந்தது ஒரு பங்கு மலை பகுதிகள் இருக்காது என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பனிமலையின் 36 சதவீதம் காணாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உருகினால் இமயமலை மற்றும் இந்து குஷ் மலைப்பகுதிக்கு கீழ் உள்ள நிலப்பகுதிகளில் பேரழிவு உண்டாகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் தான் 10 நதிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருவதாகவும், ஆனால் இந்த பனிமலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும் எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பாதிக்கப்படுவதால் நேரடியாக அல்லது மறைமுகமாகவோ 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் பாதிப்புகளை சந்திப்பார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால், அதிகரிக்கும் காற்று மாசு காரணமாகவும் பனிமலைகள் துரிதமாக உருக தொடங்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Himalayas , Ice,Himalaya,Hind Kush,Experts
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...