கரூர்: விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அதாவது தினந்தோறும் ரூ.16.50 தருவதாக அறிவித்ததை கண்டித்து கரூரில் காங்கிரசார் நேற்று பிரதமருக்கு ரூ.17க்கு டிடி அனுப்பும் நூதன போராட்டம் நடத்தினர். இதில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரதமர் பெயரில் ரூ.17க்கு டிடி எடுத்து பதிவு தபாலில் அனுப்பினர். டிடி எடுக்க ரூ.59 கமிஷன் ஆனதாக கூறி பதிவு தபால் அக்னாலஜ்மென்ட்டுடன் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தனர். 17 ரூபாய் அனுப்ப மொத்தம் ரூ.100 செலவானதாக தெரிவித்தனர். ஏழைத்தாயின் மகனான நரேந்திர மோடி வருடம் தோறும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதன்படி நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.17 தான் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும். இதனை வைத்து ஒரு டீ கூட வாங்க முடியாது. எனவே நாங்கள் அனுப்புகிற ரூ.17ஐ செலவுக்கு வைத்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டு ஒரு கடிதத்தையும் அனுப்பினர்.பேங்க் சுப்பிரமணியன் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் கூட நாள் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்பட்டது. அந்த தொகையை நிவாரணமாக வழங்கியிருக்க வேண்டும். இவ்வளவு குறைவான தொகை வழங்குவதாக அறிவித்து விவசாயிகளை கேவலப்படுத்தி விட்டதாக கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி