நெல்லை : பிரதமர் கடந்த வாரம் திறந்துவைத்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரமேலும் சில வாரங்கள் ஆகும். தற்போது பணியாளர்கள் நியமனம் நடக்கிறது.
நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 7 மாடி, 4 மாடி, 2 மாடி என பிரமாண்ட தொடர் கட்டடிங்களைக்கொண்ட இந்த மருத்துவமனை வளாகத்தை மதுரையில் நடந்த விழாவில் கடந்த 27ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். கட்டிடப்பணி முடிந்ததையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட மருத்துவமனையில் மொத்தம் 330 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 50 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 7 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், கதிரியக்கப்பிரிவு., மைய கிருமிநீக்கும் துறை உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளன.சிறப்பு மருத்துவ துறைகளான நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், இரப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை பிரிவுகளும் மயக்கவியல், கதிரியக்கவியல், நோயக்குறியியல், நுண்ணுரியியல், உயிர் வேதியியல், உதிரமாற்று ஆகிய துணை மருத்துவ பிரிவுகளிலும் சேவைகள் நடைபெற உள்ளன.
கட்டிடம் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் இந்த மருத்துவமனை எப்போது திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதாக என்பது குறித்து தற்போது ஆய்வு நடக்கிறது. nகுறிப்பாக கழிவுநீர் ஓட்டம், நீர் வரத்து, நீர்த்தேக்க ெதாட்டி உள்ளிட்ட புதிய இணைப்புகள் அனைத்தும் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்தும் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை அரங்குகளில் உள்ள சிறிய கடைசிகட்டபணிகளும் நடக்கின்றன. இது மட்டுமின்றி 68 பல்நோக்கு சிறப்பு டாக்டர்கள், 168 நர்சுகள், 250 இதர பணியாளர்கள் என 483 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து நிரப்பும் பணிகளும் நடக்கின்றன.எனவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பாட்டிற்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலில் புறநோயாளிகள் பிரிவும் தொடர்ந்து ஒவ்வொரு சிறப்பு மருத்துவதுறை அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவனை செயல்பாட்டிற்கு வந்ததும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுக வேலைவாய்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மரச்சோலை
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 400 புதிய மரக்கன்றுகள் மற்றும் 5500 சதுர அடியில் புல்வெளி அமைக்கப்பட்டு சோலை போல் பராமரிக்கப்படுகிறது. சோலார் மின் வசதி, 5500 மில்லி லிட்டர் திறன் கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் புதிய உயர் பட்ட மேற்படிப்பு இடங்கள் இதன் மூலம் உயரவாய்ப்புள்ளது. அடுத்த கல்வியாண்டில் எம்பிபிஎஸ் சீட் நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு 150ல் இருந்து 250ஆக உயரவும் இதன் மூலம் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி